Wednesday, August 29, 2012

நல்லூர் கோவில் கள்வர்களும் தாலிக்கொடி தோல்விகளும்.

நல்லூர் முருகன் கோவிலில் இம்முறை களவுகள் வெகுவாகக் குறைந்திருந்தன. காரணம் பெண்கள் குழந்தைகள் மிகக் குறைவாகவே நகைகள் அணிந்திருந்தனர் அத்துடன் 2,000க்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான உத்தியோக உடையணிந்த பொலிஸாரும் சாதாரண உடையணிந்த பொலிஸாரும் காலையிலிருந்து இரவுவரை கடமை புரிந்தனர். இவர்களால் ஆரம்பநாட்களிலேயே வெளியூர்களில் பரிட்சயமான திருடர்கள் களையெடுக்கப்பட்டனர். இந்த செய்தி பத்திரிகைகளில் பெரிதாக இடப்பட்டதனால் கோஸ்டியாக செயற்படும் மற்ற வெளியூர் திருடர்கள் தொழிலில் ஈடுபட பயந்துவிட்டனர் போலும். யாழ்ப்பாணப் பெண்களுக்கு மிகுந்த சந்தோசத்தைத் தரக்கூடிய விடயம் என்னவென்றால் தாலிக்கொடியோடு 2,3 சங்கிலிபோட்டு அவற்றை மறைக்காதபடி  சோல் போட்டோ அல்லது சேலை கட்டியோ ஸ்கூட்டியில் போவதுதான். இந்த சந்தோசம் கட்டின மனுசனுக்குத் தேத்தண்ணி கொடுக்கும்போது அவர்களுக்கு கிடைக்குமோ தெரியாது.





சரி யாழ்ப்பாண பெண்களும் இம்முறை நல்லூர் முருகன் கோவில் திருவிழாவிற்கு வரும்மோது பெரிய கழுத்து பிளவ்ஸ் அணிந்து தாலிக்கொடி உள்ளேயிருப்பது போல காட்டிக்கொண்டனர். பவுண் விலைப்படி. கிலிற் நகையோட கோவிலுக்கு வந்தால் நெற்றியில் அடித்ததுமாதிரிக் கேள்வி கேட்கும் அயல்வீட்டுப் பெண்கள் 'என்ன கிலிற் நகையோட கோயிலுக்கு வந்திருக்கிறாய், நகையெல்லாம் அடவோ அல்லது வித்துப்போட்டியளோ' என்ற கேள்விகள்.

எது எப்படியிருப்பினும் நம்ம நாட்டுப்பெண்களுக்கு யார்யாருடய கொடி விற்கப்பட்டுபிட்டது, யார்யாருடய கொடி அடவில, லொக்கரில என புள்ளிவிபரங்கள் விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள்.
•    கனகசபை போய்ட்டார்தானே அவற்ற மனிசியின்ர கொடிக்கு என்ன நடந்தது? இந்த இம்போட்டன்ற் கேள்விக்கு பதில் காணவெண்டு அந்த அயலட்டம் பட்ட பாடு உங்களுக்குத்தெரியுமா? அடுத்த வீட்டுக்காரர்கள் ரேடியோ ரீவி எல்லாம் நிப்பாட்டிப்போட்டு மதிலோட மதிலாக சாய்ந்து கிடந்து கூட்டுறதுமாதிரியும் கழுவுறது மாதிரியுங் கிடந்து ஒட்டுக்கேட்டு கண்டுபிடித்து விட்டினம்.
கடைசிப்பெடியனுக்குத்தான் எண்டு இருந்ததாம் அவன் எக்கவுண்டனாகி விட்டபடியால் கஸ்டப்பட்டுப்போன இரண்டாவது பெடியனுக்குத்தான் எண்டு தீர்மானமாகி கடைசிப் பெட்டையின்ர லொக்கர்ல வைச்சிருக்காம். கஸ்டப்பட்டுப்போன இரண்டாவது பெடியனுடய மகளுக்கு நல்லது ஏதாவது நடக்கேக்க அதைக் குடுப்பினமாம். இப்பதான் அயலட்டமெல்லாம் நிம்மதியாயிருக்கு கொடிப் பிரச்சனை அறிந்தாச்சு எண்டு.

இந்தமுறை ஒரு அதிசயம் நடந்தது நம்ம றோட்டில இருக்கிற ஆக்களெல்லாம் சேர்ந்து நல்லூருக்குப் போகேக்க ஒரு சங்கிலியும் ஒரு சோடி காப்பும் போதுமெண்டு தீர்மானிச்சு அதன்படி நடந்தினம். ஆனால் காரைநகர் கடைக்காரற்ற மனிசிமட்டும் தான் தாலிகட்டின நாள்ல இருந்து இந்த 18 பவுண் கொடியை கழற்றினதில்லையாம் கழட்டவும் மாட்டனெண்டு மனுசனிட்டையும் சொல்லிப்போட்டாவாம். கள்ளன் என்னட்ட வந்தால் ஒண்டில் நான் அல்லது அவன் எண்டு சவால் வேறயாம்.


மனிசி தனியத்தான் நல்லூர் முருகன் கோவில் திருவிழாவிற்கு போய் வந்து கொண்டிருக்கிறா. நம்ம றோட் பொம்பிளையள்தான் மோட்டசைக்கிளில்ல இருந்து பாய்ஞ்சு அறுத்தானாம் சைக்கிள்ள வந்து புடுங்கினவங்களாம் எண்டு அவ போறநேரம் சொல்லுவினம் மனிசியும் கேள்விப்பட்டனான் எண்டு சொல்லிப்போட்டு போய்க்கொண்டிருக்கும்.
ராசுவின்ர பெடியன்தான் கள்ளர் அவவிற்கு கிட்டப்போகாத காரணத்தை ஒரளவிற்கு ஊகித்து வெளியில் சொல்லியுள்ளான்.
அந்த மனிசி கோயிலால வரும்போது அரை மணித்தியாலம் கிலிற் நகைகடையுள் நின்று பார்த்துவிட்டு வருவதால் கள்ளருக்கு கொன்பியூஸாம் அவ போட்டிருக்கிறது கிலிற்றா தங்கமா எண்டு. இதுதான் அவவின் தற்போதய வெற்றியின் ரகசியமாம்.
எப்பிடியிருந்தாலும் அடுத்த முறை நல்லூர் முருகன் கோவில் திருவிழாவிற்கு நாங்கள் போகாமலா இருக்கப்போறம் கள்ளரும் வராமலா இருக்கப்போகினம்?

எல்லாம் நல்லூர் முருகன் துணை.



  

No comments:

Post a Comment